சங்கீதம். 30. ஆலய பிரதிஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம். யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன், ஏனெனில், ஆழங்களிலிருந்து நீர் என்னை வெளியே தூக்கியெடுத்தீர்; என் பகைவர் என்னைப் பழித்து மகிழ நீர் இடமளிக்கவில்லை. என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நீர் என்னை சுகமாக்கினீர். யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்; குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர். யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குத் துதி பாடுங்கள்; அவருடைய பரிசுத்தத்தை நினைத்து நன்றி கூறுங்கள். அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே, ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்; இரவிலே அழுகை இருந்தாலும், காலையிலோ மகிழ்ச்சி வரும். நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது, “நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்” என்று சொன்னேன். யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது, என்னுடைய மலையை உறுதியாய் நிற்கப்பண்ணினீர்; ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது, நான் மனம்சோர்ந்து போனேன். யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்; யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன். “நான் அழிந்து குழிக்குள் போவதால் என்ன பயன்? தூசி உம்மைத் துதிக்குமோ? அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ? யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும். யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.” என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்; நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு, மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர். ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்; என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.